சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரம்
ஏழாம் திருமுறை
7.90 கோயில் (சிதம்பரம்)
பண் - குறிஞ்சி
மடித்தாடும் அடிமைக்கண் அன்றியே
    மனனேநீ வாழும் நாளுந்
தடுத்தாட்டித் தருமனார் தமர்செக்கில்
    இடும்போது தடுத்தாட் கொள்வான்
கடுத்தாடுங் கரதலத்திற் றமருகமும்
    எரிஅகலுங் கரியபாம்பும்
பிடித்தாடி புலியூர்ச்சிற் றம்பலத்தெம்
    பெருமானைப் பெற்றா மன்றே.
1
பேராது காமத்திற் சென்றார்போல்
    அன்றியே பிரியா துள்கிச்
சீரார்ந்த அன்பராய்ச் சென்றுமுன்
    னடிவீழுந் திருவி னாரை
ஓராது தருமனார் தமர்செக்கில்
    இடும்போது தடுத்தாட் கொள்வான்
பேராளர் புலியூர்ச்சிற் றம்பலத்தெம்
    பெருமானைப் பெற்றா மன்றே.
2
நரியார்தங் கள்ளத்தாற் பக்கான
    பரிசொழிந்து நாளும் உள்கிப்
பிரியாதத அன்பராய்ச் சென்றுமுன்
    அடிவீழுஞ் சிந்தை யாரைத்
தரியாது தருமனார் தமர்செக்கில்
    இடும்போது தடுத்தாட் கொள்வான்
பெரியோர்கள் புலியூர்ச்சிற் றம்பலத்தெம்
    பெருமானைப் பெற்றா மன்றே.
3
கருமையார் தருமனார் தமர்நம்மைக்
    கட்டியகட் டறுப்பிப் பானை
அருமையாந் தன்னுலகந் தருவானை
    மண்ணுலகங் காவல் பூண்ட
உரிமையாற் பல்லவர்க்குத் திறைகொடா
    மன்னவரை மறுக்கஞ் செய்யும்
பெருமையார் புலியூர்ச்சிற் றம்பலத்தெம்
    பெருமானைப் பெற்றா மன்றே.
4
கருமானின் உரியாடைச் செஞ்சடைமேல்
    வெண்மதியக் கண்ணி யானை
உருமன்ன கூற்றத்தை உருண்டோட
    உரைத்துகந் துலவா இன்பம்
தருவானைத் தருமனார் தமர்செக்கில்
    இடும்போது தடுத்தாட் கொள்வான்
பெருமானார் புலியூர்ச்சிற் றம்பலத்தெம்
    பெருமானைப் பெற்றா மன்றே.
5
உய்த்தாடித் திரியாதே உள்ளமே
    ஒழிகண்டாய் ஊன்கண் ஓட்டம்
எத்தாலுங் குறைவில்லை என்பர்காண்
    நெஞ்சமே நம்மை நாளும்
பைத்தாடும் அரவினன் படர்சடையன்
    பரஞ்சோதி பாவந் தீர்க்கும்
பித்தாடி புலியூர்ச்சிற் றம்பலத்தெம்
    பெருமானைப் பெற்றா மன்றே.
6
முட்டாத முச்சந்தி மூவா
    யிரவர்க்கு மூர்த்தி என்னப்
பட்டானைப் பத்தராய்ப் பாவிப்பார்
    பாவமும் வினையும் போக
விட்டானை மலையெடுத்த இராவணனைத்
    தலைபத்தும் நெரியக் காலால்
தொட்டானைப் புலியூர்ச்சிற் றம்பலத்தெம்
    பெருமானைப் பெற்றா மன்றே.
7
கற்றானுங் குழையுமா றன்றியே
    கருதுமா கருத கிற்றார்க்
கெற்றாலுங் குறைவில்லை என்பர்காண்
    உள்ளமே நம்மைநாளுஞ்
செற்றாட்டித் தருமனார் தமர்செக்கில்
    இடும்போது தடுத்தாட் கொள்வான்
பெற்றேறிப் புலியூர்ச்சிற் றம்பலத்தெம்
    பெருமானைப் பெற்றா மன்றே.
8
நாடுடைய நாதன்பால் நன்றென்றுஞ்
    செய்மனமே நம்மை நாளுந்
தாடுடைய தருமனார் தமர்செக்கில்
    இடும்போது தடுத்தாட் கொள்வான்
மோடுடைய சமணர்க்கும் முடையுடைய
    சாக்கியர்க்கும் மூடம் வைத்த
பீடுடைய புலியூர்ச்சிற் றம்பலத்தெம்
    பெருமானைப் பெற்றா மன்றே.
9
பாரூரும் அரவல்குல் உமைநங்கை
    யவள்பங்கன் பைங்கண் ஏற்றன்
ஊரூரன் தருமனார் தமர்செக்கில்
    இடும்போது தடுத்தாட் கொள்வான்
ஆரூரன் தம்பிரான் ஆரூரன்
    மீகொங்கில் அணிகாஞ் சிவாய்ப்
பேரூரர் பெருமானைப் புலியூர்ச்சிற்
    றம்பலத்தே பெற்றா மன்றே.
10
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com